மத்திய இயற்கை வனப் பகுதிக்கு வெளியே உள்ள சிம் சாலையில் ஐந்து காட்டுப் பன்றிகள் நேற்று முன்தினம் பிற்பகல் கூண்டுக்குள் காணப்பட்டன. இது குறித்து தமது அமைப்புக்குப் பொதுமக்களில் ஒருவர் தெரிவித்ததாக விலங்கு ஆய்வு, கல்விச் சங்கத்தின் நிறுவனரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லூவிஸ் இங் தெரிவித்தார்.
சங்கத்தைச் சேர்ந்த குழு கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட காட்டுப் பன்றிகளை வனத்துக்குள் விடுவித்துவிட்டதாக திரு இங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார். காட்டுப் பன்றிகளைக் குறிவைத்து அந்தப் பெரிய கூண்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார் சங்கத்தின் துணைத் தலைமை நிர்வாகி அன்பரசி பூபால்.
கூண்டுக்குள் காட்டுப் பன்றிகள் மாட்டிக்கொண்டதாக பிற்பகல் 3.30 மணி அளவில் தகவல் கிடைத்ததாகவும் சங்கத்தைச் சேர்ந்த குழு அவ்விடத்தை மாலை 4 மணி அளவில் சென்றடைந்ததாகவும் திருவாட்டி அன்பரசி கூறினார். 15 நிமிடங்கள் கழித்து வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தின் அதிகாரிகளும் அங்கு வந்தடைந்ததாக அவர் தெரிவித்தார்.
கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட காட்டுப் பன்றிகள். படம்: திரு லூவிஸ் இங் பேஸ்புக் பக்கம்