பொது இடத்தில் தொல்லை விளைவித்ததற்காகவும் அரசாங்க ஊழியர்களை வேண்டுமென்றே காயப்படுத்திய தற்காகவும் 65 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். எண் 1, கேலாங் செராயில் ஆடவர் ஒருவர் பலரிடத்திலும் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாக சனிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு யாரோ ஒருவர் புகார் கூறியதாகவும் அதைத் தொடர்ந்து தாங்கள் அந்த இடத்திற்குச் சென்றதாகவும் போலிஸ் தெரிவித்தது. அதிகாரிகள் அந்த நபரை சென்று விசாரித்தபோது அவர் அதிகாரிகளுக்குக் கீழ்படியாமல் நடந்துகொண்டார். பல எச்சரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டார்.
அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தபோது அந்த ஆடவர் மூர்க்கமாக மாறி இரண்டு அதிகாரிகளைக் காயப்படுத்தி விட்டார். கைதுசெய்யப்பட்டவர் செங் குவோயான் என்பவர் என்றும் அவருக்கு 'கிளி மனிதர்' என்று பெயர் உண்டு என்றும் தெரிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில வார காலமாகவே இந்த ஆடவர் பற்றி போலிசுக்கு புகார்கள் வந்ததாகத் தெரிகிறது.
கைதுசெய்யப்பட்ட 'கிளி மனிதர்' செங் குவோயான். படம்: தி நியூ பேப்பர்

