ப. பாலசுப்பிரமணியம்
இவர் போதிக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியின் மாணவர்கள் இவரை வகுப்பறையில் 'மம்மி' அதாவது 'அம்மா' என்று அழைப்பார்கள். இது தற்செயலாக அவர் பெற்ற பெயர் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆரம்பகால கல்வித் துறை விரிவுரையாளராகப் பணியாற்றும் திருமதி மா. வினோதினி மாணவர்களிடம் அன்புக் காட்டிய விதமே இந்தச் செல்லப் பெயருக்கு வித்திட்டது.
வகுப்பறையிலும் வகுப்பறைக்கு அப்பாலும் மாணவர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடும் 42 வயது விரிவுரையாளர் வினோதினிக்குக் கடந்த மாதம் மதிப்புக்குரிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. தலைசிறந்த கற்பித்தலிலும் நிபுணத்துவ அம்சங்களிலும் சிறந்தோங்கும் விரிவுரையாளர்கள் 15 பேருக்கு இவ்வாண்டுக்கான விருது கிடைத்தது. கல்லூரியில் சேருவதற்கு முன், திருமதி வினோதினி தனியார் பாலர் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர்.
தொழில்நுட்பக் கல்விக் கழக படிப்பு முடிந்த பிறகும் மாணவர்கள் இவருடன் தொடர்ந்து தொடர்பு வைத்துகொண்டு ஆலோசனைப் பெற்று வருகின்றனர். கற்பிக்கும் எல்லா மாணவர் களையும் தம் பிள்ளைகளாகக் கருதுவது தமக்கு இயல்பாகி விட்டது என்கிறார் வினோதினி.
"தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேரும் மாணவர்கள் சிலர் குறைந்த தன்னம்பிக்கையுடன் வருகின்றனர். ஆனால் அவர்கள் படிப்பின் இறுதிக் கட் டத்தில் தமக்குள் இருக்கும் ஆற் றல்களை மேம்படுத்தி தன்னம்பிக்கைமிக்கவர்களாக உருவெடுக் கும்போது அதுவே சாதனையாகக் கருதப்படுகிறது," என்று வினோதினி சொன்னார்.
ஒருமுறை, உயர்நிலைப் பள்ளியில் பலமுறை தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவர் தமது வகுப்பில் சேர்ந்தபோது சிறிது காலம் வகுப்புக்கே வரவில்லை. அவரைக் கல்லூரியிலிருந்து நீக்காமல் இரண்டாம் வாய்ப்பு கொடுக்குமாறு விரிவுரையாளர் வினோதினி பாடுபட்டார். அம்மாணவரை வகுப்புகளுக்கு வர ஊக்குவித்தார். மாணவரின் வீட்டில் கணினி இல்லாததால் அவர் பாடத்தை முடிக்கும் வரை அவருடன் கல்லூரியில் இருப்பார், உணவும் வாங்கி தருவார்.
இன்று அந்த மாணவரோ பல துறைத் தொழிற்கல்லூரிக்கு முன்னேறியபோதும் வினோதினியுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருப்பது இந்த விரிவுரையாளருக்குப் பெரும் ஆனந்தத்தைத் தருகின்றது. இப்படி எத்தனையோ மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து அவர்களின் வளர்ச்சி யில் பெருமிதம் கொள்ளும் இவர், மாணவர்கள் வகுப்பறையில் சிறு சிறு முன்னேற்றங்களை வெளிக் காட்டும்போது அதனை அங்கீகரித்துப் பாராட்டுவது அவர்களது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றார். "மாணவர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதற்குப் பல காரணங்களைக் கூறலாம். இந்த மாணவர்களுக்குள் பல திறமைகளும் ஆற்றல்களும் மறைந்துள்ளன.
"தங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக் குக் கொடுப்பது ஆசிரியர்களாகிய நமது முக்கிய கடமை," என்று கூறினார் விருது பெற்ற நல்லா சிரியர் வினோதினி.

