'துடிப்புமிக்க குஜராத்' மாநாடு

'துடிப்புமிக்க குஜராத்' மாநாடு

3 mins read

செய்தி: இர்ஷாத் முஹம்மது

உலக முதலீடுகளை இந்தி­யாவின் குஜராத் மாநிலத்­திற்கு ஈர்க்கும் நோக்கத்தில் 'துடிப்பு­மிக்க குஜராத்' அனைத்­துலக உச்சநிலை மாநாடு எதிர்­வரும் ஜனவரி மாதம் 18, 19, 20ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

அந்த உச்சநிலை மாநாட்டிற்கு சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 20 பேர் கொண்ட பேராளர் குழு குஜ­ராத்திற்கு செல்லவுள்ளது. அந்தக் குழுவை சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் மன்றம் வழி­நடத்­தும்.

"பொதுத்துறை, தனியார்துறை­யைச் சேர்ந்த 20 நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் சிங்கப்பூரைப் பிரதி­நிதிக்­கின்­றனர். இதுவரை மன்றம் வழிநடத்திய பேராளர் குழுவில் ஆகப் பெரியதாக இது உள்ளது," என்று கூறினார் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கே பரதன்.

சிங்கப்பூர் வர்த்தக கூட்­ட­மைப்பு, எண்டர்பிரைஸ் சிங்­கப்பூர் போன்ற பொதுத்துறை அமைப்புகளும் சிங்கப்பூர் ஏர்­லைன்ஸ், தெமாசெக் ஹோல்டிங்ஸ், அசென்டாஸ், சிங்கப்பூர் துறைமுக ஆணையம் போன்ற அரசு சார்பு நிறுவனங்களும் மாநாட்டில் பங்கு பெறுகின்றன.

ஒன்பதாவது முறையாக நடக்கும் இந்த மாநாடு, அனைத்துலக அளவில் சமூகப் பொருளியல் மேம்பாடு குறித்த கருத்துகளைப் பற்றி விவாதிக்கும் தளமாக உரு­மாறியுள்ளது. உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநிலங்கள் அள­விலும் 'புதிய இந்தியா' உரு­வாவதற்குத் தேவையான முழு பொருளியல் வளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டு மாநாடு நடக்கவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கி­வைக்கவுள்ளார். அவர் குஜ­ராத்தின் முதலமைச்சராக இருந்தபோது 2003ஆம் ஆண்டு 'துடிப்புமிக்க குஜராத்' உச்சநிலை மாநாட்டை அறிமுகப்படுத்தினார்.

"இந்தியப் பிரதமர் மோடியின் இரண்டு சிங்கப்பூர் வருகைகளுக்­குப் பின் இடம்பெறும் மாபெரும் ஆக்கபூர்வ அதிகாரத்துவ வர்த்­தக பங்காளித்துவம் இந்த மாநாட்­டின் மூலம் கிடைக்கும்," என்று நம்பிக்கைத் தெரிவித்தார் பேராளர் குழுவுக்குத் தலைமைத் தாங்­கும் சபையின் துணைத் தலைவர் திரு பிரசூன் முகர்ஜி.

"சிங்கப்பூரிலிருந்து செல்லும் பேராளர்கள் இந்தியாவின் முக்கிய வர்த்தக ஜாம்பவான்களைச் சந்­திக்­கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வர்த்தக ரீதியான ஒப்பந்தங்கள் உரு­வாவதற்கு இந்த மாநாடு தக்க தளத்தை ஏற்படுத்திக்­கொடுக்­கும். அதற்கான முயற்சி­களைச் சபை எடுத்துள்ளது," என்று திரு முகர்ஜி குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் மன்றம்யின் புதிய இயக்­குநர் குழு கடந்த ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றதிலிருந்து மன்றம் தமது செயல்பாடுகளை முடுக்கி­ விட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாக இந்தி­யாவின் வர்த்தக, தொழில் மன்றம்­களுடன் புரிந்துணர்வுக் குறிப்­பில் கையெழுத்திட்டுப் பங்காளித்து­வத்தை மேம்படுத்தி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் பஞ்­சாப் வர்த்தக, தொழில் சபையுடன் புரிந்துணர்வு குறிப்பை கையெழுத்திட்ட இந்தச் சபை, இந்த மாநாட்டில் குஜராத் வர்த்தக, தொழில் மன்றம்யுடன் புரிந்துணர்வு குறிப்பில் கையெழுத்திடவுள்ளது.

"பல நாடுகளைச் சேர்ந்த அர­சாங்க அதிகாரிகளையும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கும் வர்த்­தகத் தளமாக இந்த மாநாடு அமை­யும். சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்­கான வாய்ப்புகளைப் பெறலாம். வர்த்தக ரீதியான சந்திப்புகள் பல நிலைகளிலும் மூன்று நாட்கள் நடைபெறும்," என்றார் சபையின் மற்றொரு துணைத் தலைவர் திரு மகேஷ் சிவசுவாமி.

இந்தியப் பிரதமர், குஜராத் முதலமைச்சர், பல்வேறு துறை­களின் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.