இரு கடைக்காரர்களிடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட கைகலப்பில் அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டு செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங் மோ கியோ அவென்யூ 1-0, புளோக் 449இல் செவ்வாய்க்கிழமை அன்று இச்சம்பவம் தொடர்பில் காலை 10.50 மணியளவில் போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு வேறு கடைகளை நடத்தி வருவோர் இடையே தொடங்கிய பேச்சு, பின்னர் வாய்ச் சண்டையாக மாறிக் கைகலப்பானது. இதில் 43 வயது ஆடவர் ஒருவரும் 47 வயது பெண்மணி ஒருவரும் காயமடைந்து சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரே மாதிரியான பொருள்களை அருகருகே கடை வைத்து விற்று வந்த இரு கடைகளும் அதன் தொடர்பாகப் பேசியதில் அவர்களுக்கு இடையே சச்சரவு ஏற்பட்டு பின்னர் சண்டையாக மூண்டதென்று அறியப்படுகிறது. இதன் தொடர்பில் போலிசார் யாரையும் கைது செய்யவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவிக்கப்பட்டது.

