நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்திருக்கிறது. அமைச்சு இன்று வெளியிட்ட வேலை வாய்ப்பு நிலவர சுற்றுச்சூழலைக் காட்டும் அறிக்கையில் (Conditions of Employment Report) இந்தத் தகவல் இடம்பெறுகிறது.
நீக்குப்போக்கு உள்ள வேலை வாய்ப்புகளை முன்பைவிட இப்போது அதிகமான வேலையிடங்கள் வழங்குவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. பகுதி நேரமாக வேலை செய்வது, வீட்டில் இருந்து வேலை செய்வது உள்ளிட்ட ஏற்பாடுகளில் குறைந்தது ஏதேனும் ஒன்றை வழங்கும் நிறுவனங்களில் கடந்தாண்டு 72% ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த விகிதம் 2017ஆம் ஆண்டில் 70% ஆக இருந்தது.
ஆய்வறிக்கையில் இடம்பெறும் நிறுவனங்களில் 22.7% நிறுவனங்கள் குறைந்தது இரண்டு வகையான நீக்குப்போக்கான ஏற்பாடுகளை வழங்குகின்றன. 2017ஆம் ஆண்டில் இந்த விகிதம் 16.8% ஆக இருந்தது. இத்தகைய ஏற்பாடுகளை வழங்கும் நிறுவனங்களில் ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு அதிகம் என்று மனிதவள அமைச்சுக்கான துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.