உட்லண்ட்சில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் மாண்டுக் கிடக்கக் காணப்பட்டதை அடுத்து கைதான 34 வயது இந்திய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
எம் கிருஷ்ணன், திருவாட்டி மல்லிகா பேகம் ரஹமன்ஸா அப்துல் ரஹ்மானைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு 10 மணிக்கும் பின்னிரவு 1.37 மணிக்கும் இடையே கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உட்லண்ட்ஸ் அவென்யூ 6 புளோக் 693டியில் 11 ஆம் மாடியிலுள்ள வீடு ஒன்றில் திருவாட்டி மல்லிகா, 40, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவர்களது உறவு எத்தகையது என்பது நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
ஆயினும் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக அந்த வீட்டின் அக்கம்பக்கத்தார் தெரிவித்ததாக வான் பாவ் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டது. அவர்களுக்கு இடையே அடிக்கடி இரவில் வாக்குவாதம் நடக்கும் என்றும் அந்தச் சத்தம் தங்களுக்குக் கேட்கும் என்றும் 10வது மாடியில் வசிக்கும் அண்டை வீட்டார் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணன், அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றம் செல்லவேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
மேல் விவரங்களுக்கு இன்றைய தமிழ் முரசு அச்சுப்பிரதியில் படிக்கலாம்.