சிங்கப்பூரில் கடந்த மூன்று வாரங்களில் டெங்கி நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத் தின் முதல் இரு வாரங்களில் மட்டும் டெங்கி பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 455 ஆகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட, இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என்று சுற்றுப்புறம், நீர்வளத்துக்கான மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டிலும் டெங்கி பாதிப்பு அதிகரித்தே வந்துள்ளது. கடந்த ஆண்டில் 3,285 டெங்கி சம்பவங்கள் ஏற்பட்டன. இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிட 20 விழுக்காடு அதிகம்.
பருவநிலை மாற்றத்தால் அதிகரித்துள்ள வெப்பநிலை, மழை போன்ற மாற்றங்கள் கொசுப் பெருக்கத்துக்கு ஊக்கமாக இருக்கக்கூடும். அதனால் கொசுவினால் ஏற்படும் நோய் பரவலும் மோசமாகலாம் என்று டாக்டர் ஏமி கோர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார். சீனப்புத்தாண்டுக் காலத்தில் பலர் அலங்காரச் செடிகளைக் கொண்டு வீடுகளைக் அலங்கரிக்கக்கூடும்; மேலும் சிலர் பெரிய தளவாடப் பொருட்கள், வீட்டுப் பொருட்களைத் தூக்கி வீசக்கூடும் என்பதைச் சுட்டிய அமைச்சர், இவை தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியங்களுக்கு வழிவிட்டு, அதன்மூலம் கொசு இனப்பெருக்கத்தை அதிகரிக்கலாம் என்றார்.

