மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்தில் ஏற்பட்ட ரயில் பழுதால் இன்று காலை வடக்கு-தெற்கு ரயில் பாதையில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் பழுது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இதனால் உட்லண்ட்ஸ் நிலையத்திற்கும் இயூ டி நிலையத்திற்கும் இடையிலான பயணங்கள 30 நிமிடங்கள் வரை கூடுதலாக நீடிக்கலாம் என்று எஸ்எம்ஆர்டி காலை 8 மணிக்கு டுவிட்டரில் தெரிவித்தது. சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்டோருக்காக உட்லண்ட்ஸ் நிலையத்திற்கும் இயூ டி நிலையத்திற்கும் இடையே இலவசப் பேருந்து சேவைகள் இயங்கும் என்றும் எஸ்எம்ஆர்டி கூறியது.
ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், ரயில் பழுது சீர்செய்யப்பட்டதாகவும் சேவைகள் கட்டங்கட்டமாக வழக்கநிலைக்குத் திரும்புவதாகவும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அந்நிறுவனம் கூறியது.
சேவை தாமதம் குறித்து சமூக ஊடகங்களில் பலர் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். தாமதத்தால் பல்வேறு ரயில் நிலையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.