ஃபஜார் இலகு ரயில் நிலையத்தில் ரயில் பழுதடைந்ததால் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையில் சற்று நேரம் தடங்கல் ஏற்பட்டது. ஃபஜார் நிலையத்தின் 'பி' சேவையில் நேற்றிரவு 10.10 மணிக்கு இந்தத் தடங்கல் ஏற்பட்டதாக எஸ்எம்ஆர்டி துணைத் தலைவர் மார்கரெட் டியோ அறிக்கை ஒன்றின்வழி தெரிவித்தார். சேவை 'ஏ'-இல் தடங்கல் ஏற்படவில்லை.
பின்னர், இரவு கிட்டத்தட்ட 11 மணிக்கு ரயில் சேவை கட்டங்கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பியது என்றது அந்த அறிக்கை. சேவை 'ஏ' புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தைச் சுற்றி வலஞ்சுழியாகச் செல்லும். இதற்கு நேர்மாறான திசையில் சேவை 'பி' பெட்டிர் ரோடு வழியாகச் செல்கிறது.
எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவியதாக அந்நிறுவனம் தெரிவித்தது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சேவைத் தடங்கலால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.