குறுக்குத் தீவு பெருவிரைவு ரயில் பாதையின் முதற்கட்டத் திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இந்தப் பாதை 29 கிலோமீட்டர் நீளமாக இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கூறினார். பன்னிரண்டு ரயில் நிலையங்களைக் கொண்டுள்ள இப்பாதை சாங்கி, லோயாங், பாசிர் ரிஸ், ஹவ்காங், அங் மோ கியோ ஆகிய வட்டாரங்களைக் கடந்து செல்லும்.
"2029ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படவிருக்கும் இந்தப் பாதையால் 100,000க்கும் அதிகமான குடும்பங்களின் போக்குவரத்து இணைப்புகள் மேம்படுவதுடன் அவர்களது பயண நேரமும் குறையும்," என்று திரு கோ கூறினார். குறுக்குத் தீவு பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ஆகியவற்றின் சந்திப்பில் அமைந்திருக்கும் 'பிரைட் ஹில்' நிலையம், ரயில் பாதை மாறுவதற்கான முனையமாக உருவாக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் முதற்கட்டத்தில் அங் மோ கியோ, ஹவ்காங், பாசிர் ரிஸ் ஆகிய நிலையங்கள் முனையங்களாக செயல்படும். குறுக்குத் தீவு ரயில் பாதை சிங்கப்பூரின் எட்டாவது பெருவிரைவு ரயில் பாதையாக அமையவுள்ளது. மேலும், இந்தப் பாதைக்கான ரயில் பணிமனையாகச் செயல்படவிருக்கும் 'சாங்கி ஈஸ்ட் டெப்போ' திட்டமிட்டதுபோல் நிலத்தடியில் இருப்பதற்கு மாறாக நிலத்தின்மீது அமைக்கப்படும் என்றும் திரு கோ தெரிவித்தார். தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் முதல் கட்டம் இவ்வாண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் திறக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.