எதிர்கால இணைய மிரட்டல்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்வதற்கான ஐந்து ஆண்டு திட்டம் தற்போது வகுக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்பு உத்திபூர்வ செயற்குழு இந்தத் திட்டத்தை உருவாக்கவுள்ளது. இது தொடர்பான பரிந்துரைகளை இந்தக் குழு இவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியிடும்.
தொலைத்தொடர்புக் கட்டமைப்பைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிக அடிப்படையானது என்று தொடர்பு, தகவல் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி, இத்திட்டத்தைப் பற்றி அறிவித்தபோது கூறினார். முதன்முதலாக நடைபெறும் தகவல் தொடர்பு ஊடக இணையப் பாதுகாப்பு மாநாட்டில் இந்தத் திட்டம் இன்று காலை அறிவிக்கப்பட்டது. மாநாடு 'ஷெரடன் டவர்ஸ்' ஹோட்டலில் நடைபெற்றது.
இணையத் தொடர்பு இருக்கும்போது மிரட்டலின் அபாயமும் ஊடுருவல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிப்பதாக டாக்டர் புதுச்சேரி கூறினார்.
தொலைத்தொடர்பு, இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் சிங்கப்பூர் எந்தெந்த வழிகளில் முன்னேறவேண்டும் என்பதை இந்தத் திட்டம் அடையாளம் காணும். கண்டுபிடிக்கப்படும் பிரச்சனைகளுக்கு ஏற்ற தீர்வுகளும் கொள்கைகளும் இந்தத் திட்டத்தில் பரிந்துரைக்கப்படும் என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. தொலைத்தொடர்புத் துறையில் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான முதலீடுகளையும் இந்தத் திட்டம் ஆராயும் என்றது ஆணையம்.