புதிய அரசு நீதிமன்ற அடுக்குமாடி வளாகம் அடுத்த ஆண்டு சைனா டவுனில் திறக்கப்பட இருக்கிறது. அதற்கான கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. புதிய அரசு நீதிமன்ற அடுக்குமாடி வளாகம் சிங்கப்பூரிலேயே ஆக உயரமான அரசாங்க கட்டடமாகும். 35 மாடிகள் கொண்ட புதிய கட்டடத்தின் முழு வடிவம் பூர்த்தியாகி உள்ளதைக் குறிக்கும் வகையில் நேற்று விழா ஒன்று நடத்தப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமை தாங்கினார். விழாவின்போது கட்டடத்துக்குத் தேவையான கடைசி கான்கிரீட் ஆளில்லா விமானத்தைக் கொண்டு கொட்டப்பட்டது.
புதிய கட்டடம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தைக் கட்ட $450 மில்லியன் செலவாகி உள்ளது. கட்டுமானப் பணிகள் 2014ஆம் ஆண்டில் தொடங்கின. கட்டடத்தில் இரண்டு டவர்கள் உள்ளன.