பெரிதாகவும் கனமாகவும் இருக்கக்கூடிய பாரந்தூக்கிகள் சாலையில் இன்னும் வேகமாகச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
24,000 கிலோகிராமுக்கு மேலான எடை கொண்டுள்ள பாரந்தூக்கிகளை ஒரு மணி நேரத்திற்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அனுமதிக்கும் திட்டம், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சோதிக்கப்படும். பாரந்தூக்கிகள் தற்போது ஒரு மணி நேரத்திற்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதற்கு அனுமதி உள்ளது. இந்த வேகம் மிகவும் மெதுவானது என்றும் சாலையில் ஓட்டுநருக்கு இதனால் சோர்வு ஏற்படலாம் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
வாகனத் தொழில்நுட்பத்திலும் பாரந்தூக்கிகளின் வடிவமைப்பிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது. ஆஸ்திரேலியா, ஹாங்காங், பிரிட்டன் ஆகிய நாடுகளின் வழக்கங்களுக்கு ஒத்துப்போகும் விதத்தில் இந்தத் திட்டம் இருப்பதாக ஆணையம் கூறியது.
இதற்கிடையே, எட்டு இருக்கை வாகனங்களுக்கான வேக வரம்பு உயர்த்தப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. இந்த வாகனங்களுக்கான தற்போதைய வேக வரம்பு மணிக்கு 70 கிலோமீட்டராக உள்ளது.