தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த 'ஸ்கூட்' விமானத்திற்குள் தனியே விடப்பட்ட பை ஒன்று காணப்பட்டதால் விமானம் பாதி வழியில் பேங்காக்கிற்குத் திரும்ப வேண்டியிருந்தது. 'டிஆர்607' என்ற சேவை எண்ணைக் கொண்டிருந்த அந்த விமானம், நேற்று தாய்லாந்து நேரப்படி காலை 11.55 மணிக்கு பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தைவிட்டுப் புறப்பட்டது. 131 பயணிகளைக் கொண்டிருந்த அந்த விமானம், ஒரு மணி நேரத்திலேயே அதே விமான நிலையத்திற்குப் பிற்பகல் 2.10 மணிக்குத் திரும்பியது.
பயணப் பைகளைக் கையாள்பவர் விமான நிலையத்தில் தனியாக விடப்பட்டிருந்த அந்தப் பை பயணி ஒருவரின் பையாக இருக்கக்கூடும் என எண்ணி, விமானப் பணியாளர்களிடம் அதனை ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு விதிமுறைகளுக்குப் புறம்பாக விமானப் பணியாளர்கள் அந்தப் பையை விமானத்திற்குள் எடுத்துச் சென்றனர்.
விமானம் பேங்காக்கைவிட்டுப் புறப்பட்ட பிறகுதான் அந்தப் பையைப் பற்றிய தகவல் விமானியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் விமானத்தை உடனே பேங்காக்கிற்குத் திருப்ப முடிவு செய்தார். பயணிகள் விமானத்தைவிட்டுத் தரையிறங்கிய பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய சோதனைகளைச் செய்ததாக ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்தது. பின்னர் அதே விமானம், வேறு பணியாளர்களுடன் இரவு 7.49 மணிக்கு பேங்காக்கிலிருந்து புறப்பட்டது. இணைப்பு விமானச் சேவைகளைத் தவறவிட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று 'ஸ்கூட்' நிறுவனம் தெரிவித்தது.