எச்ஐவி இருப்பதாக நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களின் கசிவு தொடர்பில் சிங்கப்பூர் மருத்துவர் லர் டெக் சியாங் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காக வரும் மே 29ஆம் தேதி நீதிமன்றம் செல்லவேண்டும். அத்துடன், அதிகாரபூர்வ ரகசியங்கள் தொடர்பான சட்டத்தின்கீழ் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான நீதிமன்ற விசாரணைக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்னர் எச்ஐவி இருப்பதாக சிங்கப்பூரில் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் பெயர்களைக் கொண்டுள்ள பதிவகத்தைப் பார்ப்பதற்கு 36 வயது லருக்கு அனுமதி இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
சுகாதார அமைச்சின் தேசிய பொது சுகாதாரப் பிரிவின் தலைவராக இருக்கும் அவர், இந்தத் தகவல்களை 'தம்ப்டிரைவ்' கருவி ஒன்றில் பதிவிறக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மார்ச் 2012க்கும் மே 2016க்கும் இடையே அவர் அந்த 'தம்ப்டிரைவ்'வை சரியாக பாதுகாக்கவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எச்ஐவி நோயாளியான தனது காதலர் மிக்கி பரேரா ப்ரொசெசின் வேலை அனுமதி அட்டையின் விண்ணப்பத்திற்காக அவரது ரத்த மாதிரிக்குப் பதிலாக தனது சொந்த ரத்த மாதிரியை லர் அனுப்பினார். இந்தக் குற்றத்தை லர் செய்ததாக நீதிமன்றம் முன்னதாக உறுதி செய்தது.