உலகளாவிய தற்கொலை விகிதம் 1990ஆம் ஆண்டிலிருந்து மூன்றில் ஒரு பங்கு குறைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 800,000 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கூறும் அந்த அமைப்பு, தற்கொலையை முக்கிய பொதுச் சுகாதார விவகாரங்களில் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளது.
தற்கொலை விகிதங்கள் நாட்டுக்கு நாடு மாறுபட்டாலும் உலக அளவில் ஒட்டுமொத்தமாகக் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் ஒவ்வொரு 100,000 பேரில் 11.2 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்தன. இந்த எண்ணிக்கை 1990ஆம் ஆண்டில் 16.6 ஆக இருந்தது.
இந்த விவரங்களைக் குறிப்பிடும் ஆய்வு பிஎம்ஜே மருத்துவ சஞ்சிகையில் அண்மையில் வெளிவந்தது. "தற்கொலை தடுக்கக்கூடிய பிரச்சனையாக இருப்பதால் அது சம்பந்தப்பட்ட முயற்சிகளில் மேலும் மும்முரம் தேவைப்படுகிறது," என்று அந்த ஆய்வில் பங்கேற்ற விஞ்ஞானி ஹெதர் ஓர்பனா தெரிவித்தார்.
15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டோரில் பெண்கள் ஆக அதிகமாகத் தற்கொலை செய்வதாகவும் இதர வயது பிரிவுகளில் ஆண்களே அதிகம் தற்கொலை செய்வதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் ஒவ்வொரு 100,000 பேரில் 15.6 ஆண்கள் தற்கொலையால் மடிகின்றனர். இந்த எண்ணிக்கை பெண்களுக்கு 7.0 ஆக உள்ளது.
2020ஆம் ஆண்டுக்குள் தற்கொலை விகிதங்களை 10 விழுக்காடாகக் குறைக்க உலக சுகாதார அமைப்பு முற்பட்டுள்ளது.