சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையான முன்னாள் கணக்கியல் அலுவலர் ஒருவர், ஏழு ஆண்டு காலகட்டத்தில் தமது முதலாளிகளின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி $46 மில்லியனை முறைகேடாக கையாடினார். அவ்வகையில், சூதாட்டத்திற்கு ஒவ்வொரு வாரமும் $100,000க்கும் அதிகமான தொகையை அவர் பயன்படுத்தினார்.
மோசடி குற்றத்திற்காக 69 வயது ரிச்சர்ட் தியாங் டெங் ஹூங்கிற்கு நேற்று 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. நிறுவனங்களில் ஊழியராக பணிபுரிந்து நம்பிக்கை மோசடி செய்தது உட்பட தம்மீது சுமத்தப்பட்ட 15 குற்றச்சாட்டுகளை தியாங் நேற்று ஒப்புக்கொண்டார். 54 வேறு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டன.
அரசு நீதிமன்றம் வழக்கத்திற்கு மாறாக விதித்துள்ள கடுமையான சிறைத் தண்டனையாக இது கருதப்படுகிறது. அதிகபட்சமாக விதிக்கப்படக்கூடிய 20 ஆண்டு சிறைத் தண்ட னையைவிட இது சற்று குறைவு.
நிதி குற்றவியல் தொடர்பாக சிங்கப்பூரின் வரலாற்றிலேயே இது ஆக அதிக அளவிலான பணம் இழப்புச் சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இப்போது பணிபுரியாத தியாங், 2007ஆம் ஆண்டு ஜனவரிக்கும் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குறைந்தது 300 முறையாவது நிறுவனப் பணத்தைக் கையாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
1990ஆம் ஆண்டில் 'டபுள் ஏஸ் டிரேடிங்' எனும் நிறுவனத்தில் தியாங் சேர்ந்தார்.
அந்நிறுவனத்தின்கீழ் நான்கு நிறுவனங்கள் செயல்பட்டன.
கட்டணச் சீட்டுகளைத் தயார் செய்வது, நான்கு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் கைமாறும் நிதியைப் பதிவுசெய்வது உள்ளிட்டவை தியாங்கின் பணிகள்.