நிலப் போக்குவரத்து ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வரும் 'கோ ஜெக்' ஓட்டுநர் தற்போதைக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார். இறுதியான முடிவு வெளிவரும் வரை ஆணையம் தன்னைத் தொடர்ந்து 'கோ ஜெக்' தனியார் வாடகைக கார் நிறுவனத்திற்கு ஓட்டுநராகப் பணியாற்ற அனுமதித்துள்ளதாக கமாருஸமான் அப்துல் லதீஃப் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.
ஜனவரி 29ஆம் தேதி, அவருக்கும் பெண் பயணி ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டதை அடுத்து திரு கமாருஸமானுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அழைப்பாணை விடுத்திருந்தது. திரு கமாருஸமானுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆணைய அதிகாரிகளின் விசாரணை நேற்று நல்ல விதமாக முடிந்ததாகத் தாம் நினைப்பதாகவும் ஆணையத்தின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் விசாரணை பற்றி அறிந்திருப்பதாகக் கூறிய 'கோ ஜெக்' நிறுவனம், ஆணையத்துடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று கூறியிருந்தது. "இதற்கு மேல் இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவிப்பது ஏற்புடையதல்ல," என்றும் அந்த நிறுவனம் கூறியது.
ஜொவீனா என்ற பெயருடைய அந்தப் பெண், ஜனவரி மாதம் 29ஆம் தேதி பீஷானில் திரு கமாருஸமானின் காரில் ஏறினார். 1 கோல்மன் ஸ்திரீட்டுக்கு ஜொவீனா அந்தக் காரில் செல்ல வேண்டியிருந்தது. மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயிலை கமாருஸமான் தவிர்க்க முடியாததால், ஜொவீனா கோபமடைந்து அவரைத் திட்ட ஆரம்பித்தார். அந்தக் கார் பின்னர் தோ பாயோ லோரோங் 4இல் நின்றது. அங்கு திரு கமாருஸமான் சிஸ்கோ அதிகாரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பதைக் காணொளி காட்டியது.
இருவருக்கும் இடையே நிகழ்ந்த அந்த வாக்குவாதத்தைக் காட்டும் ஏழு நிமிடக் காணொளியைத் திரு கமாருஸமான் பதிவேற்றம் செய்தார். காணொளியைப் பதிவேற்றம் செய்தது, போலிஸ் நிலையத்திற்குக் காரை ஓட்டிச் சென்றது ஆகியவற்றுக்கான காரணங்களை ஆணையம் தன்னிடம் கேட்டதாகத் திரு கமாருஸமான் கூறினார்.
தனிப்பட்ட முறையில் சந்தித்து பிரச்சினையைத் தீர்ப்பதில் இருவருக்கும் விருப்பமில்லாதது போல இருப்பதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது. தன்னிடம் இதற்கு எந்தப் பதிலும் இல்லை என்று கூறிய திரு கமாருஸமான், "மன்னிக்க நான் தயார் என்றாலும் இதனை மறக்கமாட்டேன்," என்று கூறினார்.
தான் எடுக்கும் எந்தத் தனியார் வாடகை வாகனச் சேவை பயணங்களுக்காகவும் மின்னியல் சாலைக் கட்டணம் கட்டியதில்லை என்று 25 வயது திருவாட்டி ஜொவீனா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தார். பீஷானுக்கும் 1 கோல்மன் ஸ்திரீட்டுக்கும் இடையே மின்னியல் சாலைக் கட்டணம் இல்லாத ஒரு பாதை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.