30,000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தை மற்றவர்களிடமிருந்து ஏமாற்றி பெற்ற முழு நேர தேசிய சேவையாளருக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 21 வயது ரொன்னி லீ ஜியா ஜியே தன் மீது சுமத்தப்பட்டுள்ள 16 மோசடிக் குற்றச்சாட்டுகளை ஏப்ரல் 12ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
டிசம்பர் 2014ஆம் ஆண்டுக்கும் மே 2017ஆம் ஆண்டுக்கும் இடையே சிங்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஏமாற்றியதை அவர் அப்போது ஒப்புக்கொண்டார். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர், ரொன்னியால் ஏமாற்றப்பட்ட 30 வயது திருவாட்டி ஈவ்லின் லி சூசியென், இது குறித்து போலிசாரிடம் புகார் செய்தார். அவரிடமிருந்து ரொன்னி மேலும் 15,000 வெள்ளியை ஏமாற்ற முயன்றார்.
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நீ சூன் ஈஸ்ட் சமூக மன்றம் ஏற்பாடு செய்திருந்த மெதுநடை நிகழ்ச்சி ஒன்றில் லீ தொண்டூழியராகக் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களின் பெயர்களையும் அடையாள அட்டை எண்களையும் கொண்ட பட்டியல் ஒன்று அவருக்குக் கொடுக்கப்பட்டது. ரொன்னி அந்தப் பட்டியலிலுள்ள விவரங்களைக் கொண்டு 49 கைத்தொலைபேசி இணைப்புகளுக்கு விண்ணப்பித்தார். ஒவ்வொரு விண்ணப்பத்தில் அவர் ஆக அதிகமான கட்டணத்தைக் கொண்டுள்ள கைத்தொலைபேசி திட்டங்களைத் தேர்ந்தெடுத்து விலையுயர்ந்த கைபேசிகளைப் பெற்றுக்கொள்வார்.
'சிங்டெல்' அப்போது கொடுத்திருந்த ஆக உயரிய மாதாந்திர கட்டணத்தைக் கொண்ட திட்டத்தின்மூலம் ரொன்னி குறைந்தது மூன்று 'ஐபோன் 6 பிளஸ்' கைபேசிகளைப் பெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
பின்னர் ரொன்னி குற்ற உணர்ச்சியால் 21 விண்ணப்பங்களை ரத்து செய்தார். ஆயினும் அவர் செய்த மற்ற விண்ணப்பங்களிலிருந்து 28 கைபேசிகளைப் பெற்றார். அந்தக் கைபேசிகளின் மொத்த மதிப்பு 30,152 வெள்ளி. அவற்றில் ஒன்பது கைபேசிகளை அவர் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் வியாபாரிகளிடம் விற்றார். கரொசெல் இணைய விற்பனைத் தளத்திலும் அவர் கைத்தொலைபேசிகளை விற்றார். விற்கப்படாத கைபேசிகளில் பன்னிரண்டு சிங்டெல் நிறுவனத்திடம் மீண்டும் கொடுக்கப்பட்டன.
கழிவறைப் பொருட்களை விற்பவரான திருவாட்டி லிக்கு பொருள் விநியோகம் செய்ய ரொன்னி கடந்தாண்டு மார்ச் மாதம் முற்பட்டதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார். திருவாட்டி லியிடமிருந்து 5,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் வங்கி பணமாற்றங்களைக் காட்டும் போலியான படங்களைக் காட்டி அந்தப் பொருளுக்காகப் பணம் கொடுக்கப்பட்டது என்று திருவாட்டி லியை நினைக்க வைத்தார். ஆயினும், அவர் எந்தப் பணமும் கட்டவில்லை என்று பின்னர் திருவாட்டி லி அறிந்தபோது அவர் போலிசாரிடம் மே 13ஆம் தேதி புகார் கொடுத்தார்.
தன்னால் ஏமாற்றப்பட்டவர்களிடம் ரொன்னி பணத்தை முழுமையாகக் கொடுத்ததாக லியின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ரொன்னி மீதான ஒவ்வொரு குற்றத்திற்கும் அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.