உலகத் திருமண தினத்தைக் கொண்டாட நேற்று முன்தினம் 280 பேர் ஆர்ச்சர்ட் பகுதியில் அமைந்துள்ள 'ஐஒன் ஆர்ச்சர்ட்' கடைத்தொகுதிக்கு வெளியே தம்பதியர்களாக ஐந்து நிமிடங்கள் உறைந்து போய் நின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் காதலர் தினத்திற்கு முன்பாகவும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்றும் உலகத் திருமண தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு 'வர்ல்வாயிட் மெரேஜ் என்கவுன்டர் சிங்கப்பூர்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
"இம்முயற்சியின் மூலம் வலுவான திருமணத்தை ஊக்குவிக்க விரும்பினோம். இன்றைய காலக்கட்டத்தில் தம்பதியர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் அதிகரிக்கும் விவாகரத்துகளையும் பார்க்கையில் திருமணம் சுலபமான பயணம் இல்லை என்பதை அறிந்தோம்," என்றார் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கிரிஸ்டினா போங்.
ஆஸ்திரேலியா, பெல்ஜியம், எக்வடோர், குவாடமாலா, இத்தாலி, ஸ்பேன் போன்ற நாடுகளிலும் உலகத் திருமண தினத்தைக் கொண்டாட இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.