சுகாதாரப் பிரச்சினைகள் உடைய இளையர் ஒருவர், தேசிய சேவையின்போது தமக்கு காயம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தின் காரணமாக 2014ஆம் ஆண்டில் சிங்கப்பூரைவிட்டு வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவில் இளநிலைப் பட்டக்கல்வியை முடித்தவுடன் சிங்கப்பூரரான சலெய் செங் ஸி சியோங், தமது தந்தைக்குப் புற்றுநோய் ஏற்பட்டதையடுத்து 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பினார்.
தேசிய சேவை ஆற்ற தமக்கு விருப்பமில்லை என்று அவர் முன்னதாக பெற்றோரிடம் கூறி இருந்தார். செங்கிற்கு ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினை குறித்த மேல் விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உரிய அனுமதியின்றி சிங்கப்பூரைவிட்டு விலகி இருந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 25 வயது செங்கிற்கு நேற்று ஏழு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் ஆயுதப் படையில் செங் தற்போது தேசிய சேவையை ஆற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அவர் தேசிய சேவையை ஆற்றத் தொடங்கினார்.