வாகன ஓட்டுநர்கள் அடுத்த திங்கட்கிழமை முதல் (பிப்ரவரி 18) மூன்று இடங்களில் காலையில் குறிப்பிட்ட சில நேரத்திற்கு மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) கட்ட வேண்டியதில்லை.
சாலைகள், விரைவுச்சாலைகள் ஆகியவற்றை மறுஆய்வு செய்த பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் இந்தத் தகவலை அறிவித்தது. ஒவ்வொரு காலாண்டும் ஆணையம் இத்தகைய மறுஆய்வை நடத்துகிறது.
காலை 7.30 மணி முதல் 8 மணி வரை மெக்ஸ்வெல் ரோட்டில் வெளியேறுவதற்கு முன்னர் மரினா கரையோர விரைவுச்சாலையில் (எம்சிஇ) மேற்குத் திசையை நோக்கிச் செல்லும் வாகன ஓட்டுநர்கள், தற்போது செலுத்தும் மின்னியல் சாலைக் கட்டணமான ஒரு வெள்ளியை இனி செலுத்தவேண்டியதில்லை.
இதேபோல், காலை 7.30 மணி முதல் 8 மணி வரை மரினா கோஸ்டல் டிரைவ்வை நோக்கிச் செல்லும் வழிச்சாலையில் மேற்குத் திசையை நோக்கிச் செல்வோருக்கும் ஒரு வெள்ளி மின்னியல் சாலைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
அப்பர் புக்கிட் தீமா ரோட்டில், காலை 8 மணி முதல் 8.30 மணி வரை மின்னியல் சாலைக் கட்டணமான ஒரு வெள்ளி அகற்றப்படுகிறது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அடுத்த மறுஆய்வு வரும் மே மாதத்தில் நடைபெறும்.