ஹவ்காங் ஸ்திரீட் 61ல் புளோக் 696 கீழ்த்தளத்தில் மின்தூக்கி ஏறுமிடம் அருகே இன்று அதிகாலையில் தீ மூண்டது.
அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைகள் தீப் பற்றியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பேச்சாளர் கூறியுள்ளார்.
இன்று அதிகாலை சுமார் 1.45 மணிக்கு இந்தத் தீச் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாகப் படை கூறியது.
சம்பவம் குறித்து அவ்வழியே சென்றுக்கொண்டிருந்த அவ்வட்டாரக் குடியிருப்பாளர் 'ஸ்டோம்ப்'பிடம் தெரிவித்துள்ளார்.
"ஏதோ வெடித்ததுபோல பயங்கர சத்தம் கேட்டதும் என்ன நடந்துள்ளது என்று பார்க்கச் சென்றேன். குடியிருப்பாளர் ஒருவர் தீயணைப்பானைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தார்," என்று ஸ்டோம்ப் வாசகர் யாமின் கூறியுள்ளார்.
பின்னர் குடிமைத் தற்காப்புப் படையினர் வந்து நீர்ப் பாய்ச்சி தீயை அணைத்துள்ளனர்.