செல்லப்பிராணி விடுதித் தொழிலுக்கான விதிமுறைகளை வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் முழுமையாக மறுஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
செல்லப்பிராணித் துறையை முழுமையாக மறுஆய்வு செய்யும் முயற்சிகளில் ஓர் அங்கமாக அந்த மறுஆய்வு அமையும்.
இந்தத் தகவலைத் தேசிய வளர்ச்சி அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் செல்லப்பிராணி விடுதிகளுக்குத் தேசிய வளர்ச்சி அமைச்சு உரிமம் வழங்குமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருவாட்டி சுன் இதனைக் கூறினார்.
செல்லப்பிராணி விடுதி ஒன்றில் தங்கியிருந்த நாய் ஒன்று காணாமல்போனதை அடுத்து இவ்வாண்டு தொடக்கத்தில் செல்லப்பிராணி விடுதிகள் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த நாய் உயிரிழந்துவிட்டதாக பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், செல்லப்பிராணி உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள், விலங்கு நலக் குழுக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளின் வெவ்வேறு தேவைகளையும் நலன்களையும் கண்டறிந்து சமநிலையை ஏற்படுத்த ஆணையம் முற்படும் என்றார் திருவாட்டி சுன்.