சிங்கப்பூர் பெருவிரைவுப் போக்குவரத்து கட்டமைப்பின் நம்பகத்தன்மை கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்த மூன்று மடங்கைவிட அதிகமாகக் கூடியுள்ளது. ஆனால், இது ரயில் சேவை வழங்குவோர் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ரயில் சேவை வழங்கும் எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகிய நிறுவனங்கள் தங்களது செயல்பாடு, பராமரிப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்தியதன் விளைவே இந்த மேம்பாடு என்றார் அவர். இதனால், எஸ்எம்ஆர்டிக்கும், எஸ்பிஎஸ் டிரான்சிட் இயக்கும் டௌன்டவுன் ரயில் பாதை சேவைக்கும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்தன. கடந்த 2018 மார்ச், 2017 டிசம்பர் மாதங்களில் முடிவடைந்த நிதியாண்டுகளில் கட்டணம் மூலம் அவை ஈட்டிய வருவாயைவிட, குறிப்பிடத்தக்க அளவு இந்த செலவு அதிகம். செவ்வாய் அன்று வெளியிடப் பட்ட டௌன்டவுன் ரயில் பாதை சேவையின் ஆகக் கடைசியான நிதிநிலை அறிக்கையைச் சுட்டிய திரு கோ, "அறிக்கை ஆராய்ந்து வருகிறோம். டௌன்டவுன் ரயில் பாதை சேவை தொடர்ந்து இழப்பையே சந்திக்கிறது," என்றார். எம்ஆர்டி ரயில் சேவைகளின் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் எவ்வளவு மானியம், கழிவுகளை வழங்கக்கூடும் என நியமன நாடாளுமன்ற உறுப்பினர் வால்டர் தெசிரா எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் கோ பதில் அளித்தார்.
அமைச்சர் கோ: ரயில் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நடைமுறைகள் செலவுமிக்கவை
1 mins read

