சைனாடவுனில் ஆடவர் ஒருவரைப் பேருந்து மோதியதை அடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
குரொஸ் ஸ்திரீட்டுக்கும் சவுத் பிரிட்ஜ் ரோட்டுக்கும் இடையிலான சாலை சந்திப்பில் இந்தச் சம்பவம் நேற்று நடந்தது. உதவிக்கான அழைப்பு பிற்பகல் 1.59 மணிக்குக் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. பாதசாரிகள் கடந்து செல்லும் பாதை வழியாக அந்த ஆடவர் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து சாலை சந்திப்பில் இடப்பக்கமாகத் திரும்பி அவரை மோதியதாக அந்தக் காணொளி காட்டுகிறது. அந்நேரத்தில் போக்குவரத்து விளக்குகள் என்ன நிறத்தில் இருந்தன என்பது தெளிவாக இல்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து விசாரித்து வருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.