சிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து மூழ்கியதாகக் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்திருக்கிறது.
'ஓஷன் கூப்பர் 2' என்ற அந்தக் கப்பல், சிங்கப்பூரின் கிழக்கிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் 'பெட்ரா பிராங்கா' தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் மூழ்கியது. சம்பவம் பற்றி இன்று காலை 7.15 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது.
டொமினிக்காவின் கொடியைத் தாங்கியிருந்த அந்தக் கப்பலைச் சேர்ந்த பணியாளர்கள் மூவரையும், கப்பலுடன் சென்றிருந்த மற்றொரு கப்பலான 'ஜாலி ரேச்சல்' காப்பாற்றியது. அந்த மூன்று பேரும் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள். கப்பலிலிருந்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் எந்தத் தூய்மைக்கேடும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் செல்கிற கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்க கடல்துறை, துறைமுக ஆணையம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சம்பவத்தை விசாரித்து வருவதாகவும் ஆணையம் கூறியது.
கடந்த மாதம், கடலடி நிலத்தில் கம்பிவடங்களையும் குழாய்களையும் பொருத்தும் கப்பலான 'எம்வி ஸ்டார் செஞ்சூரியன்' (Star Centurion), எண்ணெய்க் கப்பல் ஒன்றுடன் மோதி கவிழ்ந்தது. அந்தச் சம்பவத்தில் எவரும் உயிரிழக்கவில்லை.