லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் முதலை ஒன்று காணப்பட்டதை அடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுப் பயனீட்டுக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நீர்த்தேக்கத்திற்கு அருகே செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்குமாறும் அவ்வாறு சென்றால் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும் கழகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆலோசனை வழங்கியது. முதலையைப் பார்க்க நேர்ந்தால் அதனைத் தூண்டாமல் அமைதியாகப் பின்வாங்கி 9632-3261 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கழகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
காதீப் வட்டாரத்திலுள்ள இந்த நீர்த்தேக்கத்தின் சுற்றுவட்டாரத்தில் ஆர்க்கிட் கன்ட்ரீ கிளப், சிலேத்தார் கன்ட்ரீ கிளப், லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கப் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன.
நீர்த்தேக்கத்தில் முதலை காணப்பட்டது குறித்து கவலை அடைவதாக நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார். லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்திற்கு அருகில் எச்சரிக்கை பதாகைகளை வைக்க பொதுப் பயனீட்டுக் கழகத்தைக் கேட்டுக்கொண்டதாகவும் திருவாட்டி லீ கூறினார்.