பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரண்டு சிங்கப்பூரர்கள் கடந்த மாதம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.
கைதானவர்களில் ஒருவரான 48 வயது வர்த்தகர் முகம்மது கஸாலி சாலே மலேசியாவில் தளம் கொண்டிருந்தார். கஸாலி, சிரியாவின் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் வான் முகம்மது அகில் பின் வான் ஸைனால் அபிடினுடன் அணுக்கமான தொடர்பு வைத்திருந்ததாக உள்துறை அமைச்சு இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கைதான மற்றொருவரான 28 வயது ஹஸிம் சியாஹ்மி மஃபூட், தற்சார்பு முறையில் கார் ஏற்றுமதியாளராகப் பணியாற்றினார். ஹஸிம் கடந்த ஆண்டு கஸாலியை சிங்கப்பூரில் சந்தித்தார். இருவரும் விரைவில் நண்பர்களாகி கஸாலியின் தீவிர சித்தாந்தங்களை ஹஸிம் ஏற்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.