பொருளியல் மறுசீரமைப்பு, வர்த்தகங்கள் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள், அனைவரையும் உள்ளடக்கும் பரிவான இல்லத்தை அமைப்பது உள்ளிட்ட கருப்பொருட்கள் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் இடம்பெறும். இந்த உரை வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும்.
தேசிய நிலையில் மட்டுமின்றி அனைத்துலக அளவிலான நிச்சயமற்ற சூழல்கள் பலவற்றைச் சிங்கப்பூர் சமாளித்திருப்பதாக நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்றிரவு வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சவால்கள் தொடர்ந்தாலும் ஒற்றுமையே சிங்கப்பூருக்கு பலம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பொருளியல் மறுசீரமைப்பைச் சமாளிக்க அரசாங்கம் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து உதவி செய்யும் என்று திரு ஹெங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். வர்த்தகங்கள் மேலும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளையும் அமைத்துத்தர அரசாங்கம் உதவும் என்றும் அவர் கூறினார்.
இவற்றைவிட முக்கியமாக, சிங்கப்பூரர்கள் அனைவரையும் உள்ளடக்கும் பரிவான இல்லத்தை அமைக்கும் பணியை அரசாங்கம் தொடர்ந்து செய்யும் என்றும் திரு ஹெங் சொன்னார்.
இவை குறித்து திரு ஹெங், வரவு செலவுத் திட்ட உரையின்போது விரிவாக உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது.