மெர்டேக்கா தலைமுறைத் திட்டத்திற்கு மொத்தம் 6.1 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும் என்றும் அந்தத் தொகையில் பெரும்பகுதி, கிட்டத்தட்ட 500,000 சிங்கப்பூரர்களின் பாரத்தைக் குறைக்க உதவும் என்றும் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்தின்வழி, 60 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டோருக்கு சிங்கப்பூர் தனது நன்றியைத் தெரிவிப்பதாகத் திரு ஹெங் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய தமது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார் . "இந்தத் திட்டம் எதிர்கால மருத்துவச் செலவு குறித்து இவர்களுக்கு மேலும் நிம்மதியைத் தரும்," என்றும் அவர் சொன்னார்..
இவ்வாண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டிலும் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தவர்களின் மெடிசேவ் கணக்கில் மேலும் 200 வெள்ளி சேர்க்கப்படும். சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்தின்கீழ் இவர்கள் மேலும் விலைக்கழிவுகளையும் பலதுறை மருந்தகங்களில் கூடுதலாக 25 விழுக்காடு விலைக்கழிவையும் பெறுவர். மேலும் இவர்களின் 'மெடிஷீல்டு லைஃப்' கட்டணங்கள் 5 முதல் 10 விழுக்காடு வரை குறைக்கப்படலாம். 'கேர்ஷில்டுலைஃப்' என்ற உடற்குறையுள்ளோருக்கான தேசிய காப்புறுதித் திட்டத்தில் அவர்கள் சேர்ந்தால் அவர்களுக்குக் கூடுதலாக $1,500 வழங்கப்படும்.
இந்தத் தலைமுறையினரின் துடிப்புமிக்க வாழ்க்கை முறையை ஆதரிக்க அரசாங்கம், 'பேஷன்கார்டு சில்வர்' விலைக்கழிவு அட்டைகளில் மேலும் 100 வெள்ளியை நிரப்பும். பொதுப்போக்குவரத்து, பொது நீச்சல் குளங்களுக்கான நுழைவு, சமூக மன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படலாம். மெர்டேக்கா தலைமுறையினரின் வாழ்நாள் முழுவதுக்குமான இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 8 பில்லியன் வெள்ளிக்கு மேல் என்று திரு ஹெங் முன்னுரைத்தார். இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள 6.1 பில்லியன் வெள்ளியும் இதனால் பெறக்கூடிய வட்டியும், திட்டத்தில் முன்னுரைக்கப்பட்ட மொத்த செலவுகளை அடைக்கும் என்று அவர் கூறினார்.
மெர்டேக்கா தலைமுறையினரைச் சேர்ந்த ஆக வயதானவர்களுக்கு இப்போது 69 வயது என்றும் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தால் பயனடைவர் என்றும் திரு ஹெங் கூறினார். வரவு செலவுத் திட்டத்தை வகுக்கும்போது நிதியமைச்சும் சுகாதார அமைச்சும் இதனை கருத்தில் கொண்டதாக அவர் சொன்னார்.
2014ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் முன்னோடித் தலைமுறைத் திட்டத்தில் 8 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டதை அடுத்து மெர்டேக்கா தலைமுறையினருக்கான இந்தத் திட்டம் வெளிவந்துள்ளது.