சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரண்டு பேர் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று கைதுசெய்யப்பட்டதாக சிங்கப்பூர் போலிஸ் படையும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்தன.
சிங்கப்பூரை நோக்கி வந்துகொண்டிருந்த மரப்படகு ஒன்றுக்குள் 16 வயது சிறுவனும் 21 வயது ஆடவரும் இருந்ததை கடற்காவல் படை, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பிடிபட்டவர்களில் 21 வயது ஆடவருக்கு ஆறு வாரச் சிறைத்தண்டனையுடன் நான்கு பிரம்படிகள் விதிக்கப்பட்டன. 16 வயது சிறுவன் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டான். இருவரும் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள்.
சிங்கப்பூரின் பாதுகாப்பைக் கட்டிக்காக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புக்கு முதன்மை அளிக்கப்படுவதாக போலிஸ் படையும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் தெரிவித்தன.