33 டங்ளின் ரோட்டிலுள்ள 'செயின்ட் ரெஜிஸ் ரெசிடன்சஸ்' கூட்டுரிமை குடியிருப்பின் வீடு ஒன்றில் நேற்றிரவு தீச்சம்பவம் நடந்தது. உதவிக்கான அழைப்பு இரவு சுமார் 11.30 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. பன்னிரண்டாவது மாடியில் உள்ள அந்த வீட்டின் படுக்கை அறையில் தீ மூண்டதாகத் தெரிய வந்தது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கூட்டுரிமை குடியிருப்பின் நிர்வாகத்தினர் குடியிருப்பாளர்களை வெளியேற்றிவிட்டதாகத் தெரிய வந்துள்ளது. பின்னர் தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர். தீப்புகையை அளவுக்கு அதிகமாக சுவாசித்த ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் அனுப்பப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. வீட்டிலிருந்து கரும்புகை கிளம்பியதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.