சிங்கப்பூரின் எச்ஐவி தரவுத்தளத்திலிருந்து தகவலைத் திருடி வெளியிட்ட அமெரிக்கர் மிக்கி ஃபெரெரா புரோச்செஸுக்கு எதிராக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தற்காலிகக் கட்டுப்பாட்டு உத்தரவு கேட்டிருந்ததை அமெரிக்க நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு உத்தரவு தற்காப்பு அமைச்சின் தகவல்களை புரோச்செஸ் வெளியிடுவதைத் தடை செய்கிறது. திருடப்பட்ட அடையாளப் பத்திரங்களை வைத்திருந்ததாக புரோச்செஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
புரோச்செஸுக்கு எதிரான தற்காலிகக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கும் இடைக்காலத் தடைக்கும் சுகாதார அமைச்சு பிப்ரவரி 14ஆம் தேதி வழக்கு மனுக்களை விடுத்தது. இணையத்தில் பெறக்கூடிய தனிப்பட்ட தகவல்களை புரோச்செஸ் பார்வையிடாமல் தடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தது. ஆயினும், தகவல்கள் இன்னும் புரோச்செஸின் கைவசம் இருப்பதால் அவர் அதனை எந்நேரமும் வெளியிடலாம் என்று அமைச்சு, அமெரிக்க நீதிமன்றத்தில் வாதிட்டது.
புரோச்செஸ், தான் களவாடிய தகவல்களை கூகல் டிரைவ் கிளவுட் தளத்தில் வைத்திருந்ததாக அவரது கைதுக்குப் பிறகு தெரிய வந்தது. பின்னர் அவர் கூகல் டிரைவ் இணைப்புகளை சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் உள்ள தனிநபர்கள், அரசாங்க அமைப்புகள், ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
புரோச்செஸின் வழக்கைக் கையாண்ட அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி செல்சி ஹொல்லிடே, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க புரோச்செஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களை அணுகியதாகத் தெரிவித்தார். தனது ஓரினக் காதலரான சிங்கப்பூரர் லர் டெக் சியாங், மோசடி செய்யும் நோக்கத்துடன் தன்னைத் திருமணம் செய்ததாகத் தெரிவித்தார். தன்னைச் சிறையில் அடைக்க லர் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் சேர்ந்து சதி செய்வதாக புரோச்செஸ் திருவாட்டி ஹொல்லிடேயிடம் தெரிவித்தார். ஆனால் இதற்கெல்லாம் புரோச்செஸ் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்று திருவாட்டி ஹொல்லிடே கூறினார்.
கடந்த மாதம், திருவாட்டி ஹொல்லிடேயுடன் மீண்டும் தொடர்புகொண்ட புரோச்செஸ், தன்னை சிங்கப்பூர் அரசாங்கம் கடத்த முயல்வதாகக் கூறினார். ஆனால் எந்த ஆதாரமுமில்லாத அவரது வெற்று வார்த்தைகளின் அடிப்படையில் மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொள்ளாது என்று தாம் பதிலளித்ததாகத் திருவாட்டி ஹொல்லிடே கூறினார். 14,200 எச்ஐவி நோயாளிகளைப் பற்றிய தகவல்கள் புரோச்செஸிடம் இருப்பதாகத் திருவாட்டி ஹொல்லிடேக்குப் பின்னர் தெரிய வந்தது.