சிங்கப்பூரில் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட போதைப்புழங்கிகளில் சுமார் 40 விழுக்காட்டினர் முதன்முறையாக அந்தக் குற்றத்தைச் செய்திருந்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் சுமார் மூவரில் இருவர் முப்பது வயதுக்கும் குறைவானவர்கள் என்று போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தனது வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் அக்கறைக்கு உரியவை என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் இயக்குநர் இங் சர் சோங் தெரிவித்தார்.
கடந்தாண்டு 3,438 போதைப் புழங்கிகள் கைது செய்யப்பட்டதாகப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. இது, 2017ஆம் ஆண்டின் 3,091ஐ காட்டிலும் 11 விழுக்காடு அதிகம். போதைப்புழங்கிகளில் 20 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களே ஆக அதிகமானோர் (1,010 பேர்).
போதைப்பொருள் புழங்கிய குற்றத்தை மறுபடியும் செய்வோரின் எண்ணிக்கை கடந்தாண்டு 2,072ஆகக் கூடியுள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,842ஆக இருந்தது. இந்தக் குற்றத்திற்காக முதன்முதலாகக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,366 ஆகக் கூடியது. இது, 2017ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 1,249ஐவிட 9 விழுக்காடு அதிகம். இவர்களில் 64 விழுக்காட்டினர் 30 வயதுக்குக் குறைவானவர்கள்.
கடந்தாண்டில் 1,760 மலாய்க்காரர்களும் 974 சீனர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்தாண்டு 31 விழுக்காடு அதிகரித்தது. இதர பிரிவினரின் எண்ணிக்கை 31 விழுக்காடு உயர்வு கண்டது.கைதுசெய்யப்பட்ட புதிய போதைப்புழங்கிகளில் மலாய்க்காரர்களின் எண்ணிக்கை (673) ஆக அதிகம்.