மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும் முன்னாள் சிறைக் கைதிகள் அதிக பயன் அடைவதாக அண்மை தகவல்கள் கூறுகின்றன. 'சிபிபி' எனப்படும் சமூகம் சார்ந்த திட்டத்தில் (Community-Based Programme) இடம்பெறும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகம். தங்களது சிறைத்தண்டனையின் அந்திமத்தை சிபிபி-யில் கழித்த கைதிகளின் எண்ணிக்கை கடந்தாண்டில் 1,098ஆக இருந்தது. இது, 2017ஆம் ஆண்டைவிட 15.4 விழுக்காடு அதிகம்.
திட்டத்தின்படி, கைதிகள் வீட்டுக்காவலில், இடைநிலை இல்லங்களில் (halfway houses) அல்லது வேலை விடுவிப்புத் திட்டத்தில் (Work Release Scheme) இருப்பர். உரிய நேரத்திற்குள் அவர்கள் சிறை அதிகாரிகளிடம் சென்று தங்களது நடவடிக்கைகளைப் பற்றி விளக்கவேண்டும்.
இந்தத் திட்டம் தனது சுயக்கட்டுப்பாட்டை மேம்படுத்தியுள்ளதாக வேலை விடுவிப்புத் திட்டத்தில் இருக்கும் 48 வயது திரு அகமது (உண்மை பெயர் அல்ல) தெரிவித்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் கூறியது. நான்கு முறை சிறை சென்றுள்ள திரு அகமது, இந்தத் திட்டம் தனக்கு நல்ல பயன்களைத் தந்துள்ளதாகக் கூறினார்.
இதற்கு முன்னர் தான் அடிக்கடி வேலை மாறியதாகவும் நினைத்தபோதெல்லாம் வேலைக்குச் செல்லாமல் இருந்ததாகவும் திரு அகமது கூறினார். ஆனால், சிறை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் தனது நேர நிர்வாகத் திறன் கூடியுள்ளதாக திரு அகமது தெரிவித்தார். மேலும், எவை தனது தேவைகள், எவை ஆசைகள் என்று பகுத்தாராயும் தன்மை இந்தத் திட்டத்தால் மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.