சிங்கப்பூரின் எச்ஐவி நோயாளிகளின் தகவல் கசிவுக்குக் காரணமான அமெரிக்கர் மிக்கி புரோச்செஸ், சிங்கப்பூரை மிரட்டுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட ஆவணங்களை சட்டவிரோதமாக வேறொரு தளத்திற்கு மாற்றியதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 34 வயது புரோச்செஸுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
விசாரணைக்காக புரோச்செஸ் புதன்கிழமையன்று (பிப்ரவரி 27) நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவரது வழக்கை சான்றாயர்கள் (jury) முன்னிலையில் ஒப்படைக்க அமெரிக்க நீதிபதி மேத்தியூ ஸ்தின்னெட் முடிவுசெய்தார். அவரைக் குற்றம் சாட்டுவதா இல்லையா என்பது குறித்து சான்றாயர்கள் முடிவெப்பர். குற்றச்சாட்டைச் சுமத்த அவர்கள் முடிவு செய்தால் புரோச்செஸ் நீதிமன்ற விசாரணைக்கு மீண்டும் செல்லவேண்டும்.
சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கான மிரட்டலை புரோச்செஸ் விடுத்திருப்பதாக இந்த வழக்கைக் கையாண்ட மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரி செல்சி ஹொல்லிடே தெரிவித்தார்.
இந்தக் குற்றத்திற்காக புரோச்செஸுக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை, 250,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
14,200 எச்ஐவி நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதற்கு புரோச்செஸ் காரணம் என்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு கடந்த மாதம் தெரிவித்தது. இந்தத் தகவல்களை வைத்திருப்பது அமெரிக்கச் சட்டங்களையும் மீறும் குற்றச்செயல் என்று திருவாட்டி ஹொல்லிடே கூறினார்.
இந்த இரண்டாவது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்காக 16 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 250,000 டாலர் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம். 1,000 டாலருக்கு மேலான மதிப்பு உள்ள தகவலை புரோச்செஸ் பெற்றால் அவருக்கு அந்த இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
ஜனவர் 22ஆம் தேதி புரோச்செஸ் சிங்கப்பூர் அதிகாரிகளுக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றை மறுஆய்வு செய்ததாகத் திருவாட்டி ஹொல்லிடே தமது ஆணையுறுதி பத்திரத்தில் (affidavit) குறிப்பிட்டார்.