பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை வீழ்த்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் உறவில் தற்போது உருவெடுத்துள்ள பதற்றம் நிதியாளர்களைக் கவலை அடையச் செய்திருக்கிறது. இருந்தபோதும், சிங்கப்பூருக்கு ஒப்பான இந்திய நாணய மதிப்பில் இந்நிகழ்வு இதுவரையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பிப்ரவரி 26ஆம் தேதியில் ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 52.48 இந்திய ரூபாய் என்ற மதிப்பு, இன்று காலை 52.79 ரூபாய்க்குக் கூடியுள்ளதாக யாஹூ நிதித்தளத்திலுள்ள புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. நேற்று மாலை கிட்டத்தட்ட 6.30 மணிக்கு ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இந்திய ரூபாய் 53 வரை உயர்ந்தது.
இந்தியப் பங்குகளையும் கடன்பத்திரங்களையும் அனைத்துலக முதலீட்டாளர்கள் பலர் விற்றுள்ளதாக 'பிஸ்னஸ் டைம்ஸ்' தெரிவித்தது. ஆயினும், இந்தியாவின் உள்நாட்டு நிதிச்சந்தையில் அதிக மாற்றம் நிகழவில்லை. இந்தியாவின் சென்செக்ஸ் பங்கு நேற்று இறுதி -0.19 விழுக்காட்டில் முடிந்தது.