அபாயகரமான போக்குகள் எவ்வாறு ஒன்றோடு ஒன்று சேர்ந்து நிலைமையை மோசமாக்குகின்றன என்பதற்கு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவும் பூசல் ஓர் எடுத்துக்காட்டு என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் (படம்) நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடுகள் தங்களது சொந்த நலனைக் கருதி தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கும் ஓர் இலக்கை எட்ட பலதரப்பு ஒத்துழைப்புக்கான ஆதரவு வலுவிழப்பதற்கும் இடையே நிலவும் உரசலைப் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
இந்நிலையில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நீடித்து வந்த கடற்துறை விவகாரம் தணிந்தது தமக்கு மகிழ்ச்சி தருவதாகக் கூறிய திரு விக்ரம், பல நிலைகளில் சிங்கப்பூரின் தலைமைத்துவக் குழுவின் முயற்சிகளால் இந்த நிலையை எட்ட முடிந்ததாகச் சொன்னார்.
சிங்கப்பூரின் பாதுகாப்பு, தற்காப்பு தேவைகளுக்காக இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்ற அவர், பாதுகாப்பு தேவைகளில் சிங்கப்பூர் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருப்பது முக்கியம் என்று கூறினார்.