போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானின் முறிந்த இடது கரத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்குத் தாம் அறுவை சிகிச்சை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து காலை 11 மணிக்கு வெளியேறியதாகவும் திரு காவ் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
நீட்டிக்கப்பட்ட மருத்துவ விடுப்பில் இருக்கும் 66 வயது திரு கோ, மருத்துமனைக் கட்டிலில் தாம் படுத்துக்கொண்டிருப்பதைக் காட்டும் படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார். நல்வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் திரு கோ அந்தப் பதிவில் நன்றி தெரிவித்தார்.
சில வாரங்களுக்குப் பிறகு திரு கோ பணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதுவரையில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தற்காலிக போக்குவரத்து அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து வகிப்பார். போக்குவரத்து விவகாரங்களின் தொடர்பில் மலேசியாவுடனான கலந்துரையாடல்களின் சீரான நிர்வாகத்தை அவர் உறுதி செய்வதாக பிரதமர் அலுவலக அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது.