நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) சுவீடனின் வால்வோ நிறுவனமும் உலகின் முதல் முழு அளவிலான தானியக்க மின் பேருந்தை அறிமுகம் செய்துள்ளன.
என்டியுவின் தானியக்க வாகன ஆய்வு, சோதனை நிலையத்தில் பல்வேறு சோதனைகளைக் கடந்த இந்தப் பேருந்து இப்போது வெளியீடு கண்டுள்ளது. இதில் சுமார் 80 பேர் ஏறி அமரலாம்.
பயணிகளுக்குப் பாதுகாப்பான, செயல்திறன் மிக்க, சௌகரியமான பொதுப் போக்குவரத்து எதிர்காலத்தில் அமைவதற்கு இந்த மின் பேருந்து பங்காற்றும் என்று என்டியுவின் தலைவர் சுப்ரா சுரேஷ் தெரிவித்தார்.
"இந்த ஆய்வு அதிநவீன அறிவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகிய கூறுகளைக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் மற்றும் உலகத்தின் நலனுக்காக, அடிப்படை ஆய்வுகளைப் பொருட்களாகவும் சேவைகளாகவும் மாற்றுவதற்காகக் கல்விமான் சமூகம், தொழில்துறை, அரசாங்க அமைப்புகள் ஆகியவை அணுக்கமாகச் செயல்பட்டு வருவதைக் காட்டும் நல்லதோர் உதாரணம் இது" என்று திரு சுப்ரா கூறினார்.
'ஜிபிஎஸ்', 'லைடார்' உணர்க்கருவிகள், 'ஸ்டிரியோ கேமரா' ஆகியவை இந்தப் பேருந்தில் இடம்பெற்றுள்ளன. இந்த வகையைச் சேர்ந்த இரண்டு பேருந்துகள் இவ்வாண்டின் பிற்பகுதியில் பொது இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். ஒரு பேருந்து என்டியுவுக்கு அருகிலும் மற்றொன்று எஸ்எம்ஆர்டி பணிமனையிலும் சோதிக்கப்படும்.