டெளன்டவுன் ரயில் பாதையில் புதன்கிழமை (மார்ச் 6) காலை ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவை தாமதமாக இயங்கியது. காலை 7.45 மணியிலிருந்து இந்தப் பிரச்சினையால் புக்கிட் பாஞ்சாங் நிலையம் முதல் பிடோக் நிலையம் வரை பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சமிக்ஞை கோளாறு காரணமாகப் பயண நேரம் 10 நிமிடங்கள் வரை கூடலாம் என்ற பொது அறிவிப்பை 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' காலை 8.30 மணிக்கு வெளியிட்டது. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, பூகிஸ் ரயில் நிலையத்திலிருந்து லிட்டில் இந்தியா ரயில் நிலையத்திற்குச் செல்லும் பயணிகளின் பயண நேரம் 20 நிமிடங்களாகக் கூடும் என்று 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
ரயில் சேவை காலை 9 மணி வாக்கில் வழக்கநிலைக்குத் திரும்பியது. மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த ரயில் நிலையங்களின் படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.