ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் மூன்று கார்களுக்கும் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும் இடையே ஏற்பட்ட விபத்தில் 83 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 31ல் நடந்த இந்த விபத்து குறித்த தகவல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) இரவு 7 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். இங் டெங் ஃபொங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த மூதாட்டி பின்னர் காயங்களால் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
மோட்டார் சைக்கிளோட்டியும் கார் ஓட்டுநர் இருவரும் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் சம்பந்தப்பட்ட அந்த இரு கார்களும் சாலையோர நடைத்தளத்தின்மீது ஏறிச்சென்றதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளி காட்டுகிறது. கார்களில் ஒன்று மரத்தின் மீது மோதியிருந்ததுபோல் அந்தக் காணொளியில் தென்படுகிறது.
சம்பவத்தை போலிசார் விசாரிக்கின்றனர்.
.