லிம் சூ காங் இடுகாட்டில் காட்டுப்பன்றி ஒன்று இரும்புப் பொறி ஒன்றில் சிக்கியதை அடுத்து திங்கட்கிழமை (மார்ச் 4) அது உயிரிழந்து கிடக்கக் காணப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சட்டவிரோதமாகப் பொறிகள் பயன்படுத்தப்படுவது குறித்து ஏக்கர்ஸ் விலங்கு நல அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
ஏக்கர்ஸ் அமைப்பைச் சேர்ந்த விலங்கு மருத்துவர் ஒருவர் அந்த இளம் ஆண் காட்டுப்பன்றியின் நிலையை ஆராய்ந்தார். மிகக் குறுகிய இடைவெளியில் சிக்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் அது மரணம் அடைந்ததாக அந்த அமைப்பு கூறியது.
பொறியிலிருந்து தப்பிக்க முயன்ற அந்தப் பன்றியிலிருந்து ரத்தம் இடைவிடாது வடிந்துகொண்டிருந்ததாகவும் ஏக்கர்ஸ் கூறியது. மேலும், அதன் வாய்க்குள் உலோக சுருள்வில் (metal spring) இருந்ததையும் அந்த அமைப்பு கூறியது.
வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையமும் தேசிய பூங்காக் கழகமும் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.
மேற்கு நீர்த்தேக்க பகுதியும் இடுகாட்டு நிலப்பகுதியும் பல வனவிலங்குகளுக்கு இல்லமாகத் திகழ்வதாக ஏக்கர்ஸ் தெரிவித்தது. இந்த விலங்குகளில் 'சுண்டா' பங்கோலின் உள்ளிட்ட அரிய விலங்குகளும் அடங்கும் என்று அந்த அமைப்பு கூறியது.
இவ்வளவு பெரிய பொறி ஒன்றை அங்கு வைப்பதால் பல்வேறு விலங்குகள் ஆபத்துக்கு உள்ளாவதாக ஏக்கர்ஸ் கூறியது.
2018ஆம் ஆண்டு அக்டோபரில் மூன்று குட்டிகள் உட்பட ஐந்து காட்டுப்பன்றிகளைக் கொண்ட குடும்பம் ஒன்று சைம் ரோட்டுக்கு அருகிலுள்ள உலோகக் கூண்டில் சிக்கியது.