சிறுவர் இல்லம், சிறுமியர் இல்லங்களின் முன்னாள்வாசிகளுக்கு, இல்ல வாழ்வுக்குப் பிந்திய ஆதரவு இரண்டு மாதங்களிலிருந்து ஓராண்டாக நீட்டிக்கப்படவுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இளையர்களுக்கு உளரீதியான ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்குவர். மேலும் இந்த இளையர்கள் தங்களது வாழ்வை மீண்டும் கட்டமைக்க அதிகாரிகள் உதவுவார்கள். அவர்களுக்கு பள்ளிகள், பயிற்சித் திட்டங்கள், வேலை வாய்ப்புகளை அறிமுகம் செய்வர்.
"ஆதரவு காலத்தை நீட்டிப்பதன் மூலம், இல்லங்களிலிருந்து வெளிவரும் இளையர்களுடன் அதிகாரிகள் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு கூடுதல் காலம் கிடைக்கும். இளையர்களை சமூகக் குழுக்களுடன் இணைக்கவும் போதிய காலம் கிடைக்கும்," என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சிறுவர் இல்லம், சிறுமியர் இல்லம் ஆகியவற்றை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நிர்வகிக்கிறது. இளம் குற்றவாளிகள், பெற்றோரின் கட்டுப்பாட்டுக்கு அடங்காத பிள்ளைகள், உதவியும் பராமரிப்பும் தேவைப்படும் பிள்ளைகள் ஆகியோர் இந்த இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். அந்த இல்லங்களிலிருந்து வெளிவரும் சிலர், உதவிக்காக நம்பகமானவர்களைத் தங்களால் அணுக முடிவதில்லை என்று தெரிவித்திருந்ததாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
இதன்தொடர்பில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கவுள்ள முன்னோடித் திட்டத்தில் 15 முதல் 20 இளையர்கள் வரை பங்கேற்பர். படிப்படியாக அடுத்த ஆண்டுக்குள் முன்னாள் இல்லவாசிகள் அனைவரும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படுவர்.