'சிங்ஹெல்த்' சுகாதாரக் குழுமத்தின் தரவுத்தளத்தை ஊடுருவியவர்கள், சிங்கப்பூரின் மற்ற அமைப்புகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குறிவைத்து வந்ததாக இணையப் பாதுகாப்பு நிறுவனம் 'சைமன்டெக்' (Symantec) தனது அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
'வைட்ஃபிலாய்' என அழைக்கப்படும் இந்தக் கும்பல், வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றின் ஆதரவில் செயல்பட்டு வந்ததாக அமெரிக்காவில் தளம் கொண்டிருக்கும் சைமன்டெக் தெரிவித்தது. ஆயினும், அந்த அரசாங்கம் எது என்பதை சைமன்டெக் அடையாளம் காட்டவில்லை. சைமன்டெக் இந்த ஆய்வைச் சுயமாக நடத்தியது என்றும் அதனை நடத்தும்படி சிங்கப்பூர் அரசாங்கம் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் நடந்த 'சிங்ஹெல்த்' தரவுத்தள ஊடுருவல், சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஊடுருவல் சம்பவமாக இருக்கிறது. 1.5 மில்லியன் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களையும் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட 160,000 பேரின் வெளிநோயாளி மருந்து விவரங்களையும் அந்த ஊடுருவிகள் களவாடினர். இதனை ஆராய விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
சைமன்டெக் நிறுவனம் வெளியிட்ட தகவலுக்கு சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு பதில் அளிக்கையில், " இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள், தங்களது புலன் விசாரணை மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் இது போன்ற அறிக்கைகளை அடிக்கடி வெளியிடுகின்றன. வர்த்தக நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்ட சுயேட்சை விசாரணை அறிக்கையாக இது இருப்பதால், இதன் விவரங்கள் குறித்து எங்களுக்கு எந்தக் கருத்துகளும் இல்லை," என்றது.