தனிநபர் உந்து நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்துவோரும் பாதசாரிகளும் பயன்படுத்தும் பாதைகளில் பாதுகாப்பு பற்றிய கவலை உள்ளது. கவனக்குறைவாகச் சாதனத்தைப் பயன்படுத்துவோரைத் தடுக்க மேலும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவேண்டும் என்று போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் கூறியுள்ளார்.
இதுவரை நடப்பிலுள்ள நடவடிக்கைகளுடன் உள் கட்டமைப்பு தொலைக்காட்சி கேமராக்களும் (சிசிடிவி) பொருத்தப்படும் என்று அவர் கூறினார். உந்து நடமாட்டச் சாதனங்கள் சட்டவிரோத முறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடங்களில் அந்த கேமராக்கள் முதலில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையம் அந்த முயற்சியில் ஈடுபடும்.