பொய்ச் செய்திகளை எதிர்க்க சட்டங்கள் உருவாக்கப்படுவது மட்டும் போதுமானதல்ல என்றும் அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து சிங்கப்பூரைக் காக்க அனைவரும் பங்களிக்கவேண்டும் என்றும் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் உண்மைத் தகவல்களையும் பொய்ச் செய்திகளையும் பகுத்தறியும் பயனீட்டாளர்களே முக்கிய தற்காப்பு என்றார் அவர்.
"வேண்டுமென்றே இணையத்தில் பொய்யான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க சட்டங்கள் வரையப்பட்டு வந்தாலும் அது மட்டுமே போதுமானது அல்ல. இணையம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் நம்பகத்தன்மை இணையத்தைப் பயன்படுத்துவோரின் கைகளில்தான் உள்ளது," என்று இணையப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் பதவி வகிக்கும் திரு ஈஸ்வரன் கூறினார்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் நடைபெறும் முதல் 'மேலும் நல்ல இணையம்' மாநாட்டில் அவர் பேசினார்.
ஊடக அறிவு மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாநாட்டில் ஆறாவது 'மேலும் நல்ல இணையம்' இயக்கம் அறிமுகம் கண்டது. பயனீட்டாளர்களிடையே நல்ல இணையப் பழக்கங்களை ஊக்குவிக்கும் பொதுக் கல்வி இயக்கம் அது.