கட்டுமானத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் சர்ச்சைகளைத் தீர்க்க மேலும் பல வழிகளை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் குத்தகையாளர்கள் சங்கம் புதிய சமரச மையத்தைத் தொடங்கியுள்ளது.
நீதிமன்றத்திற்குச் சென்று நேரமும் பணமும் விரயமாவதைத் தவிர்க்கும் வகையில் இந்தப் புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறையில் அதிகரித்துவரும் பூசல்களால் சமரச முயற்சிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதற்காகவே சிங்கப்பூர் கட்டுமான சமரச மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான குத்தகையாளர்களுக்கும் துணை குத்தகையாளர்களுக்கும் இடையே பெரும்பாலும் பண வழங்கீடு பிரச்சினைகளும் சேதம் ஏற்பட்டதால் எழும் விவாதங்களுமே சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகச் சங்கத்தின் பேச்சாளர் கூறினார்.
சிங்கப்பூர் சமரச மையம் இதுவரை இந்தப் பிரச்சினைகளை விசாரித்து வந்தது. 2017ஆம் ஆண்டில் 40% கட்டுமானத் துறை பிரச்சினைகளையே மையம் கையாண்டது.
மனிதவள, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று சிங்கப்பூர் கட்டுமான சமரச மையத்தைத் தொடங்கிவைத்தார்.